என் கதைகள், உலகோடு நான் ஆடிய பகடையாட்டம்.தோற்ப்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்ப திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீறாவிளையாட்டு. ஏறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியை போல வெறியோடும் பேராசையோடும் உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்து கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள். வாழ்க்கை பலரையும் அவரவர் இருப்பிடங்களில் இருந்து பிடுங்கி எங்கெங்கோ நட்டிருக்கிறது. நினைவில் ஒரு ஊரும், நிகழ்வில் ஒரு ஊரிலுமாக வசித்து கொண்டிருக்கிறோம் . நிலம் நம் மீது கொள்ளும் ஆளுமையை நாம் விரும்பினாலும் அழிக்க முடியாது. அது மேலோட்டமாக நம்முடைய பேச்சில், தோற்றத்திலிருந்து மறைந்திருக்க கூடும். ஆனால் நம் இருப்பில், நம் நிலையில், நம் கனவுகளில் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது. என் முதல் கதையிலிருந்து 2005 ஆம் ஆண்டுவரை வெளியான எனது சிறுகதைகளை உள்ளடக்கிய முழுத்தொகுப்பு இது. இதன் முதற்பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. இப்போது அதன் மறுபதிப்பை உயிர்மை வெளியிடுகிறது. - எஸ். ராமகிருஷ்ணன்