கடவுள் அருளால் எல்லா வளமும் அமையப் பெற்றிருந்தாலும் திருப்திப்படாமல் எதிலும் மனநிறைவு கொள்ளாமல் உற்சாகம் இழந்து சோர்ந்து காணப்படுபவர்களும் இருக்கிறார்கள். இருப்பதில் இன்பம் கண்டு, கிடைக்கப் பெற்றதில் நிறைவு கண்டு எப்போதும் உற்சாகமாக ஊக்கமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். உற்சாகம் என்பது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைத் தொற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று. வீட்டில் ஒருவர் உற்சாகத்துடன் கலகலப்பாக செயல்பட்டால்கூட நிச்சயம் அது அந்த வீட்டு அங்கத்தினர்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டு அந்த வீட்டையே களிப்புக் கடலில் ஆழ்த்திவிடும்.