அறிவு வேறு; உணர்வு வேறு. அறிவில் மலர்வது தத்துவம்; உணர்வில் கனிவது பக்தி. ஒன்று மூளை என்றால் மற்றொன்று இதயம். இரண்டில் ஏதேனும் ஒன்று போதும் என்று எவர்தாம் சொல்வார்? பக்திக் கலப்பற்ற தத்துவம் வறட்டு வேதாந்தமாகக் கருதப்படும். அறிவுத் தொடர்பற்ற பக்தியோ வெறும் குருட்டு நம்பிக்கையாக எண்ணப்படும். இரண்டும் இணைந்தால் அங்கே வறட்டுத் தன்மை மாயும், குருட்டுத் தன்மை மாளும்; நிறைவு அல்லது பூரண நிலை தோன்றும்; வாழ்விற்கான-குறிக்கோள் கொண்ட வாழ் விற்கான வழி பிறக்கும்.
'தத்துவமும் பக்தியும்' என்ற தலைப்பு தமிழில் ஒரு சோதனை முயற்சி. தத்துவ ஞானிகள் மட்டுமே ஆராயக் கூடிய துறை. தமிழகத்தில் திறனாய்வுத் தந்தையெனப் போற்றப்படும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் இந்தத் துறையில் துணிந்து முயன்று பெருவெற்றி பெற்றுள்ளார்கள். பேராசிரியர் அவர்கள், நூல் வெளியீடு உயர்ந்த நோக்கமும் புதிய சிந்தனைத் தூண்டலும் கொண்ட தாக அமையவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். இக்கூற்றுக்கு இந்த நூலும் ஒரு சான்றாகும்.