இந்த நூல் பகவத்கீதையின் ஸாராம்சம், சுவாமி தயானந்த ஸரஸ்வதி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தர்மம் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாக இருக்கக்கூடிய ஆனந்தத்தை அடைவதற்கு ஸ்ரீகிருஷ்ணரால் கீதையில் அருளப்பட்டிருக்கும் விஷயமானது மிகவும் முக்கியமானது. ஆத்மாவைப் பற்றிய விசாரமான கீதையின் உபதேசங்களின் ஸாரம் "பகவத் கீதையின் ஸாராம்சம்" என்ற தலைப்பில் வெளியிடப்படுகிறது. முகவுரை:தர்மத்தைக் கடைபிடிக்கும் மனோபாவம் மனதினுடைய வளர்ச்சியின் முதற்படி. தனக்கும், பிறருக்கும் எது நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்த போதிலும், அந்த நல்லது என்று சொல்லப்படுகிற தர்மத்தினுடைய மதிப்பு நம்மிடம் பூரணமாக இல்லாவிடில், மற்ற பொருள், இன்பம் போன்ற விஷயங்களுடைய ஆசைகளின் பலம் அதிகரித்து தர்மத்திலிருந்து நழுவ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற்காகவே தர்மம் என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தினுடைய மதிப்பையும் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஏற்பட்ட விசாரம்தான் தர்மத்தின் மதிப்புதான் என்ன? என்ற நூல். இந்த தர்மம் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாக இருக்கக்கூடிய ஆனந்தத்தை அடைவதற்கு ஸ்ரீகிருஷ்ணரால் கீதையில் அருளப்பட்டிருக்கும் விஷயமானது மிகவும் முக்கியமானது. ஆத்மாவைப் பற்றிய விசாரமான கீதையின் உபதேசங்களின் ஸாரம் பகவத்கீதையின் ஸாரம்ஸம்என்ற தலைப்பில் வெளியிடப்படுகிறது. அவ்வாறே ஸாதனமும், ஸாத்யமும் என்ற புத்தகம் மனிதனுடைய முக்கிய குறிக்கோளை அடைவதற்கு வேண்டிய வழிகளை விசாரித்து போதிக்கின்றது. இந்த மூன்று புத்தகங்களும் சென்னை வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறதைக் குறித்து நான் சந்தோஷம் அடைகிறேன். அரும்பெரும் தமிழ் புத்தகங்களை வெளியிடுவதில் வானதிக்கு ஈடு வானதியே. இப்பதிப்பகத்தை அமைத்து மேன்மையாகவும், நேர்மையாகவும் நடத்தி வரும் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதிஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைக்கட்டி, கோயம்புத்தூர் - 641 108. - ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி. எளிமையுடன் சாஸ்திரங்களை வழங்கும் ஸ்ரீ ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி கும்பகோணம் அருகில் உள்ள மஞ்சக்குடியில் பிறந்த ஸ்வாமிஜி அவர்கள் இளமையிலேயே வேதாந்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு வேதாந்தத்தையும், ஸம்ஸ்க்ருதத்தையும் ஸம்ப்ரதாய முறையில் கற்றுத் தேர்ந்தார். துறவறம் பூண்டபின் இவர் பகவத்கீதை, உபநிஷதங்கள் இவற்றின் உபதேசங்களையும், நம்முடைய கலாசாரத்தையும் சென்ற 40 வருடங்களாக உலகம் முழுவதிலும் போதித்து வருவதில் அயராது ஈடுபட்டுள்ளார். அத்துடன் குருகுல முறையிலும் பல சிஷ்யர்களுக்கு இந்த வித்யையை போதித்து வருகிறார். குருகுல முறையில் இந்த வித்யையை போதிக்கும் பொருட்டு ஸ்வாமிஜி அவர்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆனைக்கட்டி என்னுமிடத்தில் ஆர்ஷவித்யா குருகுலம் என்ற ஸ்தாபனத்தையும், கங்கைக் கரையில் ரிஷிகேசத்தில் ஆர்ஷ வித்யா பீடம் என்னும் ஸ்தாபனத்தையும், அமெரிக்காவில் பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஸெய்லர்ஸ்பர்க் (Saylorsburg) என்னுமிடத்தில் ஆர்ஷ வித்யா குருகுலம் என்ற ஸ்தாபனத்தையும் நிறுவி இருக்கிறார். ஆர்ஷ வித்யா என்ற சொல் ரிஷிகளுடைய வித்யை என்று பொருட்படும். இந்த ஸ்தாபனங்களில் ரிஷிகளுடைய வித்யைகளான ஸம்ஸ்க்ருதம், பகவத்கீதை, உபநிஷத்துகள், ப்ரஹ்மஸூத்ரம் இவை சங்கரருடைய பாஷ்யத்துடனும், மற்றும் பல ப்ரகரண க்ரந்தங்களும் போதிக்கப்படுகின்றன. இவரிடம் கற்ற சிஷ்யர்களில் பலர் இன்று மக்களிடையே இந்த வித்யையைப் பரப்பி வருகிறார்கள். ஸ்வாமிஜி அவர்கள் தன்னுடைய குருகுலத்தில் மட்டுமல்ல, பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளிலும் சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தை விட்டு இம்மியும் பிறழாமலும், அதே சமயத்தில் எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் போதிப்பதில் சிறந்தவர். இரண்டு நாட்களே ஆனாலும் சரி, இரண்டு வாரமானாலும் சரி, சாஸ்த்ரத்தின் திருஷ்டியை மக்களுக்குப் பூரணமாகக் காட்டிவிடுவதில் அவர் வல்லவர். உலகம் எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும், கீதை உபநிஷத்துகள் கூறும் தத்துவமானது ஒருகாலும் மாறாதது. அவ்வாறே, அவை போதிக்கும் மதிப்பீடுகளும், கர்மயோகமும் இன்றைய ஜெட்வேக உலகத்திலும் முக்கியத்வம் உடையவை என்பதை அவர் எப்பொழுதும் சுட்டிக் காட்டுவார். ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய சொற்பொழிவை ஒன்றரை மணிநேரம் கட்டிப் போட்டு வைத்தாற்போல் கேட்பதிலிருந்தே அவருடைய போதனைத் திறமையை நாம் அறியலாம். அதே சமயத்தில் சாஸ்த்ரத்தை நன்கு படித்தவர்களும் இவருடைய சொற்பொழிவுகளைக் கேட்கும்போது, தாம் படித்த ஆழ்ந்த கருத்துகளையும் இவர் எவ்வாறு இவ்வளவு எளிதாக மக்களுக்குப் புரிய வைக்கிறார் என்று வியப்படைவார்கள். போதிப்பதில் மட்டுமே வல்லவரல்லர் ஸ்வாமிஜி அவர்கள். எல்லாவித மக்களிடமும் எளிமையாகவும் சரளமாகவும் பழகுவதும் அவரது தனிச்சிறப்பு. உங்களில் பலரும் ஸ்வாமிஜி அவர்களை, அவருடைய சொற்பொழிவுகளின் மூலம் அறிந்திருப்பீர்கள். அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டிராதவர்களும் ஆனந்த விகடனில் வந்த 'மனம் மலரட்டும்' என்ற அவருடைய கட்டுரைகளின் மூலமும், அவர் இயற்றியுள்ள 'போ சம்போ' முதலிய பாடல்களின் மூலமும் அறிந்திருக்கலாம்.