மேல்நாட்டு விஞ்ஞான வாழ்க்கை முறை, இந்தியக் குடும்பங்களை ஊடுருவி, எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது! அடித்தளம் இந்தியப் பண்பாட்டில் அமைந்திருந்த போதிலும், அதன்மீது அமைக்கப்படும் வாழ்க்கை என்னும் கட்டடம், மேல்நாட்டுச் சிந்தனைகளால் மாற்றம் பெற்றுள்ளது. இதோ, இந்த நாவலில் வரும் குடும்பத்தைப் பாருங்கள். இக்குடும்பம், பெரும் பணக்காரக் குடும்பந்தான், படித்துப் பட்டம் பெற்ற குடும்பந்தான். ஆனால், அரண்மனை போன்று பரந்து விரிந்த அந்த வீட்டில் வாழும் கணவனும் மனைவியும், இரு துருவங்களாக- இரு தீவுகளாக இருக்கிறார்கள். ஏன்? நேருக்கு நேர் நின்று, ஒரு நிமிடம் பேசினால் தீர்ந்துவிடும் பிரச்சினை, தவறான நோக்கால் பெரிய பிளவாக விரிந்து விடுகிறது. இக்குடும்பத்தில் பிரிந்த அவர்கள் மகள், பெற்றோர்களைச் சேர்த்து வைக்கும் 'தகப்பன் சாமி'யாக மாறுகிறாள். வாழ்க்கை என்பது இரயில் பயணம் அன்று, கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஸ்டேஷன் வந்ததும், பிரிந்து சென்று மறந்துவிடுவதற்கு. நான் என்னும் அகங்காரத்தை அடக்கி ஆண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான், இல்லறம் இனிய வீணையாகும்.