மேல் காற்று என்ற இந்த நாவல் என் லட்சிய ஆத்ம ராகங்களின் கீதம். எந்த மண்ணில் பிறந்து எந்த மண்ணில் புரண்டு, எந்த மண்ணின் வாசனையை சுவாசித்து, நான் மனிதத்துவத்தையும் அதன் மாண்புகளையும் கூடவே அதன் வக்கிரங்களையும் உணர்ந்து கொண்டேனோ, அந்த மண்ணில் வாழும் கதை இது. கதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையாக இருந்தாலும், அவர்கள் இன்னும் இந்த நெல்லை மாவட்ட தென்கோடியில் தேரிக்காடுகளின் அடையாளம் காணக்கூடியவர்கள். காசுக்காக கலப்படம் செய்யாத சுத்தமான பதநீரை சுவைத்து வாழ்பவர்கள். பகவதி பாத்திரத்தை நான் உருவாக்கும்போது, அந்த மகாகவி பாரதியாரே பெண்மையின் பெருமையைப் பற்றிய உணர்வுகளை உருவாக்க என் நெஞ்சத்தில் அமர்ந்திருந்ததைப் போல் உணர்ந்திருக்கிறேன். பொன்னி என் பேனாவுக்கே கண்ணீரை வரவழைத்தவள்.