சாகித்ய அகாதெமி நிறுவனம், இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி பற்றிய இந்த நூலை வெளியிடுகிறது. நூலின் நோக்கம் நா பார்த்தசாரதியின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு, மற்றும் அவரது இலக்கியம் குறித்த அறிமுகம் ஆகியன மட்டும்.
சிறுகதை. சமூக நாவல், சரித்திர நாவல், கவிதை, நாடகம், கட்டுரை. கேள்வி - பதில், பயண இலக்கியம் என்று பல்வேறு துறைகளில் எழுத்தைப் படைத்தவர் அவர். ஓர் இலக்கியவாதியாக மட்டுமல்லாமல், 'தீபம்' என்ற இதழை ஆசிரியராக இருந்து நடத்தி பல்வேறு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் இலக்கிய சக்தியாகவும் இயங்கியவர். தமது இனிய தமிழ் நடையால் ஏராளமான வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். மரபுத் தமிழ், நவீனத் தமிழ் இரண்டிலும் பயிற்சியும், பாண்டித்தியமும் உடையவர். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். இத்தகைய மாபெரும் சாதனையாளைரைப் பற்றி மிக விரிவாக ஆய்வு நோக்கில் புத்தகங்கள் எழுதப்பட வேண்டும். இந்த நூலின் நோக்கம் ஆய்வு அல்ல. அறிமுகம் தான். நா.பா.வின் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இன்றைய வாசகர்கள் மனத்தில் ஏற்படுத்த வேண்டுமென்பதே இந்நூலாசிரியனின் ஆசை சமூக மேம்பாட்டை மட்டுமல்லாமல், சுயமுன்னேற்றச் சிந்தனைகள் மூலம் தனி மனித மேம்பாட்டையும் வலியுறுத்தி அவர் எழுதிய எழுத்துக்கள், அவர் காலத்தில் தேவைப்பட்டதை விடவும் அதிகமாக இன்று இளைஞர்களுக்குத் தேவைப்படுகின்றன.