அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உரைநடை வளர்ந்தது. 1904ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் வரும் உரைநடைக் குறிப்புக்கள் தொடங்கி, சுந்தரம் பிள்ளை, சூரிய நாராயண சாஸ்திரியார் வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காய்தல், உவத்தல் அகற்றி ஆராயும் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இனி, தமிழ் உரைநடை வளர்த்த சான்றோர்களைக் காண்போம்.
அச்சு இயந்திர அறிமுகம் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. அச்சடித்த உரைநடை நூல்கள் பல வருவதற்குப் பல அறிஞர்கள் காரணமாகத் திகழ்ந்தார்கள். அத்தகைய முன்னோடிகளாகிய தமிழறிஞர்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.