உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த சுவாசம்தான் வாழ்க்கை. இந்த உண்மையை நாம் அறிந்திருக்கும் அளவுக்கு அதை உணரவில்லை என்பதே உண்மை.இது பற்றி விரிவாய் எழுதுவதாய் முன்னரே குண்டலினி தொடரில் குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில் இந்த மூச்சுக்கலை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ப்ராணன் என்றால் மூச்சு, யாமம் என்றால் ஒழுங்கு செய்தல் ஆகும். யோக நெறியில் நான்காவது படிநிலையாக ப்ராணயாமத்தை பதஞ்சலி முனிவர் அருளியிருக்கிறார். இந்த மூச்சு நமது உடலில் மூன்று கட்டமாய் நிகழ்கிறது.