சிலிர்ப்பூட்டம் அனுபவங்கள்....
நடமாடும் தெய்வத் திருஉருவாக நம்மிடம் வாழ்ந்த காஞ்சி மகா பெரியவர் ஓர் ஆன்மிகப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து அருள் பாலித்தவர். பக்தர்களுக்கு நன்னெறி போதித்து அவர்களை நல்வழியில் அழைத்துச் சென்ற வள்ளல் பெருமான்.
அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தவர் மகா பெரியவர். மெய்ஞானம் அவருக்குத் தெரியும். விஞ்ஞானம் அவர் விரல் நுனியில். அணு ஆயுதங்கள் பற்றி பேசுவார். மருத்தும் பற்றி அலசுவார். சாஸ்திரங்களை கரைத்துக்குடித்திருந்த அவருக்கு சங்கீத லட்சணங்களும், லட்சியங்களும் பூரணமாக தெரிந்திருந்தது.
மகா பெரியவரின் தரிசனத்துக்காக செல்லும் சங்கீத வித்வான்கள் பலரும் அவர் சந்நிதானத்தில்பாடுவதையும், இசைப்பதையும் பெரும் பேறாக்க் கருதுவார்கள். தங்களுக்குத் தெரியாத இசை நுணுக்கங்கள் பலவற்றையும் கற்றுக் கொண்டு பரவசப்படுவார்கள்.
எஸ். கணேச சர்மா எழுதியிருக்கும் இந்த நூல், மகா பெரியவரின் இசைப் புலமையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மகா பெரியவர் அளித்த துல்லியமான விளக்கங்களை பதிவு செய்கிறது. உதாரணமாக, காம்போதி ராகத்தில் அமைந்த 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' கீர்த்தனையை மகா பெரியவரின் முன்னிலையில் அரியக்குடி பாட, அதற்கு வரிக்கு வரி அர்த்தம் சொல்லி அந்த மகான் விளக்குவதைப் படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படும்.
அதே மாதிரி, சங்கீத வித்வான்கள் சிலருடன் மகா பெரியவர் நிகழ்த்திய விவாதங்களும் அந்த வித்வான்களின் அனுபவங்களையும் நூலில் இணைத்துக்கொடுத்திருக்கிறார் எஸ். கணேச சர்மா.
சங்கீத ரசனையுள்ள அத்தனைபேருக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.
-ஆசிரியர்