
சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (பாகம் 2)
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கரி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
அய்யர் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து, கண்முன் பரத்தியிருந்த நிலக்கடலை களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ‘நச், நச்’சென்று தரையில் உடைத்து, பருப்புகளை முறத்தில் போட்டாள் தனபாக்கியம்.மரகதபுரத்து அக்ரஹாரத்திலிருந்த எல்லா வீடுகளுமே, அவளுக்கும் அந்தக் குடிசைப்பகுதி மக்களுக்கும் ‘அய்யர் வூடு’கள்தாம். பெரிய அய்யரு, சின்ன அய்யரு, மாடி வூட்டு அய்யரு, கோவில் பூசாரி அய்யரு, கோடிவூட்டு அய்யரு – என்று அக்ரஹாரத்தில் பத்து வீடுகளுக்கும் அவர்கள் பெயர் வைத்திருந்தார்கள். ஐய்யங்கார் ராமச்சந்திரன்கூட – நாமம்போட்ட, ‘செவத்த அய்யரு’தான். மரகதபுரத்தில் எண்ணி இரண்டே தெருக்கள்… ஒன்று – அக்ரஹாரம், மற்றது – ரெட்டியார் தெரு. சிவன் கோவில், ஊருக்குப் பொது. ஊருக்குத் தள்ளி ஓடிய பெண்ணாற்றுக்குக் கிழக்குப் பக்கம், குடிசைப்பகுதி… அதனருகில் வெட்ட வெளியில், மதுரை வீரன் கோவில்.குந்தி உட்கார்ந்து மளமளவென்று நிலக்கடலைப் பயிர்களைச் சேகரித்துக் கொண்டிருந்த தனபாக்கியம், பக்கத்தில் நிழலாடியதால் தலைநிமிர்ந்தாள்.
அவள் மகள் மல்லிகா.
“இன்னாடி… ஒடம்பு தேவலையா? சுடுதண்ணி வெச்சிருந்தேனே… மேலுக்கு ஊத்திக்கினியா?”
“ம்…”
மல்லிகா முக்கிமுனகிக்கொண்டு தாயின் அருகில் உட்கார்ந்தாள். நிரம்பி வழிந்த கர்ப்பத்தின் காரணமாய், குந்தி உட்காராமல் சப்பணமிட்டுச் சுவரில் சாய்ந்துகொண்டாள்.
வயிற்றுக்குள் ஏதோ வேதனை இருப்பதை, சோர்ந்திருந்த முகம் காட்டியது.
“இன்னாத்துக்கு இப்படி வெயில் நேரத்துல இங்க வந்தே? வூட்டுல படுத்துக் கெடக்கறதுதானே? கேப்பங்கஞ்சி வச்சிருந்தேனே, குடிச்சியா?”
தனபாக்கியத்தின் மூத்த மகள், மல்லிகா. அடுத்த கிராமமான சாலமேட்டில் பயிர்த் தொழில் செய்யும் தம்பிக்கே மகளைக் கொடுத்து, நாலில் இரண்டில் பார்த்துக்கொள்பவள். தலைச்சன் பிரசவம் என்பதால், இங்கு மரகதபுரத்துக்கு மகளைக் கூட்டிவந்து பத்து நாட்களாகின்றன. மல்லிகாவின் கணக்குப்படி பார்த்தால், இன்னும் ஒரு வாரத்தில் பிரசவமாகவேண்டும். என்றாலும், முதல் நாள் இரவிலிருந்து ‘இடுப்பைக் கடுக்கிறது’ என்று மகள் சொன்னதால், பிரசவம் சுருக்க ஆகிவிடலாம் என்றே தனபாக்கியம் நம்பினாள்.
