"ஏகபோகமும் எதேச்சதிகாரமும் ஏகாதிபத்தியமும் பிரிந்தும் பிணைந்தும் செயலாற்றும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், மார்க்சியத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது.
முதலாளித்துவப் பொருளதார அறிஞர்களாலும்கூட புறக்கணிக்கமுடியாத பங்களிப்பை கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் எங்கெல்ஸும் அளித்துள்ளார்கள். முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய ஆய்வுகளை உள்ளடக்கிய மூலதனம், உலகின் தலை சிறந்த அரசியல் பொருளாதார நூலாக இன்றளவும் கருதப்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடுகளைக் கறாரான முறையில் அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசி ஆராய்கிறது மூலதனம்.
‘முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அந்த உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றிய முதலாளித்து சமுதாயத்தை ஆளும் சிறப்பு விதியையும்’ மார்க்ஸ் கண்டறிந்தார் என்கிறார் எங்கெல்ஸ். உயிர்களின் விதிகளை சார்லஸ் டார்வின் கண்டறிந்ததுபோல், மனித வரலாற்றின் இயங்கு விதிகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் மூலதனத்தின் வாயிலாகக் கண்டறிந்தனர்.
மூலதனம் நூல் விற்பனை உலகம் முழுவதிலும் தொடர்ந்து அதிகரித்து வருவது, இந்நூலின் இன்றைய பொருத்தப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் துல்லியமாக உணர்த்துகிறது.
புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:
”நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித்தொடர்புகள் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரிதும் நேர்முகமானவை. இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான நாடுகளிலும் இன்னும் வேகமாக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கிற அவசியமும், தடங்கலுக்கு இடம்தராத விஷயங்களைக் குளிர்கால மாதங்களில், பிரதானமாக ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பூர்த்தி செய்வதற்கென ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன. ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும்போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டும் மதமதப்புடன் செயல்படுகின்றன. சிரமமான தத்துவப் பிரச்னைகளில் ஏற்படும் தடங்கல்களை இனியும் அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே ஒரு குளிர்காலத்தின் பணி, பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் பெரும்பாலும் புதிதாகத் துவக்கப்பட வேண்டிய நிலைமையே ஏற்பட்டது. மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியின் விஷயத்தில் நடந்தது இதுவே.’’
– எங்கெல்ஸ் முன்னுரையிலிருந்து"