அரசனின் ஆணைகளை கோட்டத்து அவையினர் என்போர் நிறைவேற்றுவர். மேலும் நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், தேவதானத்து ஊர்களிலார், பள்ளிச்சந்தங்கள், கண்முற்றூட்டு, வெட்டிப்போறு, நகரர்கள் ஆகியோரும் நிறைவேற்றி வைப்பர். நாட்டார் சபையான நாடும் பிரம்தேயச் சபையும் ஊர்ச்சபையும் அரசாணையின் மேல் பிறப்பித்த கட்டளைகளை ஆவணத்தில் எழுதி வைத்திருப்பர். மதியஸ்தன் காரணத்தான் என்பவரே எழுதுபவர். சபைத் தலைவனுக்குத் திருவடிகள் என்ற பெயர். தானம் செய்யப்பட்ட ஊரின் எல்லைகளைக் குறித்த அரசாங்க அலுவலர் நால்வர் உண்டு.
குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவை தவிர உழுதுண்மக்கள் என்ப்படும் உழவர்கள் குழுக்களுக்கு சித்திரமேழி என்ற பெயர் இருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. சபையில் ஆட்டைவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்ச வாரியம், பொன்வாரியம் எனப்பல பிரிவுகள் இருந்தன.இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன. உறுப்பினர் தேர்வு குடவோலை முறைப்படி நிகழும். இச்சபையானது பெருங்குறி என்பபடும். வாரிய உறுப்பினர்கள் ' வரிய பெருமக்கள்' எனப்படுவர். இச்சபைகளும் வாரியங்களும் மரத்தடிகளிலேயே கூடும்.