தெய்வத்தின் தூதர்களாகவும் தாயின் அம்சங்களாகவும் இந்த மண்ணில் உதித்த மகான்களை வணங்கிப் போற்றுவது மனித குலத்தின் பண்பு. அருள் மணம் பரப்பும் அன்பு வடிவமாக, அறியாமை என்னும் இருளை அகற்றும் ஒளி விளக்காக அவதாரம் எடுத்த மகான்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை, மக்களிடையே சென்று விளக்கி அவர்களின் துயரைத் துடைத்திருக்கிறார்கள். 'தன்னையே அறிவது' என்ற தத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்கள். தெய்வீக சக்தி மனிதர்களுக்கு நேரடியாகத் தோற்றம் அளிப்பதில்லை. பல கோயில்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று தேடினாலும் அந்த சக்தியை உணரும் பக்குவம் சுலபமாக எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஆன்மிக பலம் கைவரப் பெற்றவர்களால் மட்டுமே அந்த சக்தியை உணர முடியும் என்று அறிந்து கொள்கிறார்கள். அந்த ஆன்மிக சக்தியை சாமான்ய மக்களுக்கு உணர்த்தவே இப்பூவுலகில் அவ்வப்போது மகான்கள் தோன்றுகிறார்கள். தமது அனுபவங்களைக் கொண்டு மனிதர்களிடையே ஆன்மிக பலத்தை ஊட்டுகிறார்கள். உபதேசங்கள் மூலம் அறம் வளர்க்கப் பாடுபடுகிறார்கள். மகான்களிடம் ஒரு தெய்வீக சக்தி இயங்கிக் கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்து, அவர்களை குருவாக ஏற்று வணங்கத் தொடங்குகிறார்கள். மகான்களின் வாழ்க்கையையும் அவர்கள் வழங்கிய உற்சாக முத்துக்களையும் சக்தி விகடனில் பரவசத்தோடு வாசித்த வாசகர்களின் அமோக வரவேற்பை ஏற்றுத்தான் 'மண்ணில் உதித்த மகான்கள்' என்னும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இந்தப் புத்தகம் உங்களுக்கு ஆன்மிக பலத்தைக் கூட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.