நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் பகலவனைப் போல் வெளிப்படுத்துவது அந்நாட்டின் தாய்மொழி அறிவாகும்.
அவ்வறிவைச் செம்மையாகப் பிழையின்றிப் பெறுவதற்குப் பெருந்துணை செய்வது அம்மொழியின் இலக்கணமாகும்.
மூத்த பழைமையான செவ்வியல் மொழியாம் நம் உயிரினிய தமிழிற்கு வாய்த்த முதல் இலக்கண நூல் அகத்தியம் ஆகும்.
அதனை அடியொற்றித் தொல்காப்பியரால் படைக்கப்பெற்றது ஒல்காப் பெரும்புகழ் கொண்ட தொல்காப்பிய இலக்கண நூலாகும். இந்நூல் அக்காலத்து வழங்கிய மக்களின் பேச்சு வழக்கையும் சான்றோர்கள் படைக்கப் பெற்ற இலக்கியங்களின் பரந்த அறிவையும் உள் வாங்கிக் கொண்டு நுண்ணறிவோடு படைக்கப்பட்டதாகும்.
இந்நூல் எளிமையான நூற்பாக்களால் அமைந்திருப்பினும் எழுத்திலக்கணம் முதலிய ஐந்திலக்கணங்களையும் கொண்டிலங்குவதால் இது ஒரு கடலாகவே தெரிந்தது. இதனால் கற்றவரும் மற்றவரும் சுருக்கமான ஓர் இலக்கண நூலை வேண்டினர். சீயகங்கன் என்னும் தமிழ் வள்ளல் ஆர்வங்கொண்டு பவணந்தி யார் என்னும் பல்கலை அறிவுமிக்க சான்றோரை வேண்டியதால் அப்பெருமானால் படைக்கப்பெற்ற இலக்கண நூலே இந்த நன்னுலாகும்.