உலகில் தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. ச.தண்டபாணி தேசகர் திருக்குறளில் ஆழ்ந்து, தோய்ந்து மிக அற்புதமாக எழுதி உள்ளார்கள். இந்நூலை படித்து பின்பு வாசகர் உள்ளத்தில் உச்சத்தை அடைந்து விடுகின்றது திருக்குறள்.திருக்குறள் மக்களின் வாழ்க்கை இயல்புகளை மட்டும் அறிவிக்கிறது. அதனால் இலக்கியமாயிற்று. ஒரு குறிக்கோள் வாழ்வின் இலக்கணங்களை அறிவிப்பதால் இதனை இலக்கிய இலக்கணம் என்று கூடக் கூறி விடலாம். இதனைக் கொண்டு உலக மக்கள் தமது வாழ்க்கையைத் திருத்தி கொள்வர் என்பதே திருவள்ளுவரின் ஆசையாகும்.திருவள்ளுவரின் திருக்குறளில் அரசனின் ஆண்மை புலப்படுகிறது. அமைச்சர் அறிவலை பாய்கிறது ஒற்றருடைய அரசியல் தந்திரம் ஆழங்காணற்படுகிறது. தூதருடைய சொல்வண்மை தோன்றுகிறது. எழில் நிறைந்த இளமங்கையோடு நுகரும் இன்பத்தேன் எங்கும் களியூட்டுகிறது. அறவோராகவும், துறவோராகவும் இருந்து செய்யும் அறவுரைகள் ஒளிவிடுகின்றன. செம்பொருள் திகழ்கிறது. இதிலிருந்து இவர் எத்தகையை வாழ்க்கையினர் என்று துணியக் கூடும்? முடியாது, இதனாலேயே இந்நூல் எல்லார் வாழ்வோடும் கூடி எல்லார்க்கும் இன்பம் பயப்பதாக, பொது நூலாக அழியாப் பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றுகின்றார் நூல் ஆசிரியர்.