1910 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் கடுமையான உழைப்பின் விளைவாக வெளிக்கொணரப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் பச்சையப்பன் கலாசாலையின் தமிழ்ப் பண்டிட் (அக்காலத்தில் அப்படித்தான் அழைத்தார்கள்) பெருமதிப்பிற்குரிய தமிழ் அறிஞர்பெருமான் ஆ. சிங்காரவேலூ முதலியார் அவர்கள் என்னும் தனி மனிதர் 'தனி மரம் தோப்பாகும்' என்று உலகுக்குக் காட்ட இந்த 'அபிதான சிந்தாமணி' தொகுப்புக் களஞ்சியத்தை 1890 ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு எதிர்நீச்சலுக்கு இடையில் 1910 ஆம் ஆண்டு இருபது ஆண்டுகள் உழைப்பிற்கும், அலைச்சலுக்கும் பிறகு இதன் முதற்பதிப்பைக் கொண்டு வந்தார்கள்.
19 ஆம் நூற்றாண்டு தொடங்கி, 20 ஆம் நூற்றாண்டில்தான் இதனைக் கொண்டுவர முடிந்தது. காரணம், சொற்ப சம்பளம் பெற்ற ஒரு தமிழாசிரியர் அவர். இவ்வரிய கருவூலத்தினை அச்சில் ஏற்றி, மக்களுக்குக் கிடைக்கச் செய்ய அவர் பட்டபாடு, 'தாளம் படுமோ தறி படுமோ' என்று கூறும் வண்ணம் ஆதரவு தேடி, அலைந்து அலுத்துப்போய் இறுதியில் வள்ளல் பாண்டியத் துரைசாமி தேவர் அவர்கள்தான், உதவி இதனை நூல் வடிவில் கொணர மிகப்பெரும் ஒத்துழைப்பைக் கொடுத்து, தமிழுக்குத் தொண்டு செய்து இறவாப் புகழ்பெற்று உயர்ந்துள்ளார்.