உலகத்திலே நாகரிகம் பெற்ற மக்கள் எல்லோரும் அழகுக் கலைகளை வளர்த்திருக்கிறார்கள். மிகப் பழைய காலந் தொட்டு நாகரிகம் பெற்று வாழ்ந்து வருகிற தமிழரும் தமக்கென்று அழகுக் கலைகளை யுண்டாக்கிப் போற்றி வளர்த்து வருகிறார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிற தமிழரின் அழகுக் கலைகள் மிக மிகப் பழைமையானவை. மிகப் பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் சமூகத்தினர் இவ்வளவு நெடுங்காலம் தொடர்ந்து நிலை பெற்றிருக்கவில்லை. தமிழர் நாகரிகம் மிகப் பழைமையானது என்பதைச் சரித்திரம் அறிந்த அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக்கொண் டிருக்கிறார்கள்.
ஆனால், தற்காலத்துத் தமிழ்ச் சமூகம், தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்துவிட்டது: "தன் பெருமை தான் அறியா' சமூகமாக இருந்து வருகிறது. "கலை கலை' என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினிமாக் கலை, இசைக் கலைகளைப் பற்றியே. இலக்கியக் கலைகூட அதிகமாகப் பேசப்படுகிறதில்லை. ஏனைய அழகுக் கலைகளைப் பற்றி அறவே மறந்துவிட்டனர் இக்காலத்துத் தமிழர். மறக்கப்பட்ட அழகுக் கலைகள் மறைந்து கொண்டேயிருக்கின்றன.தமிழச் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கிற அழகுக் கலைகளைப் பற்றி இக்காலத்தவருக்கு அறிவு முகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். ஆனாலும், அழகுக் கலைகளைப் பற்றிப் பேசப் புகுந்தபோது, முறைமை பற்றி எல்லா அழகுக் கலைகளைப் பற்றியும் கூறப்படுகிறது.
அழகுக் கலைகளைப் பற்றி மேல்வாரியான செய்திகளே இந்நூலில் பேசப்படுகின்றன. அழகுக் கலைகளின் முற்ற மடிந்த செய்திகளைக் கூறுவது இந்நூலின் நோக்கம் அல்ல. அழகுக் கலைகளைப் பற்றிய மேல் வரம்பான, பொதுத் தன்மையைக் கூறும் நூல் ஒன்று வேண்டியிருப்பதை யுணர்ந்தே இந்நூல் எழுதப்பட்டது.