என் வாழ்வில் நான் கலந்துகொண்ட மிகச் சிறந்த இலக்கியக் கூட்டங்களில் ஒன்று, புரவி இலக்கியக் கூடுகை. அங்கே நான் என் வாழ்வில் அரிதாக, என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமோ யாரையும் மதிப்பிட வேண்டிய அவசியமோ இல்லை என்று உணர்ந்தேன். அந்தக் கூட்டத்தில் நான் பேசிய, பிறர் பேசிக்கேட்ட சில கருத்துகளைத் தமிழ்நாட்டில் வேறெந்த சூழலிலுமே பேச முடியாது. புரவி கூடுகையைத் தவறவிட்ட படைப்பாளிகள் நிஜமாகவே மிகப் பெரிய அனுபவம் ஒன்றை இழந்துவிட்டார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. கூடுகை முடிந்து பெங்களூருக்குத் திரும்ப வேண்டும் என்ற நிலை வந்தபோது எனக்குள் சட்டென்று பரோல் முடிந்து நான் சிறைக்குத் திரும்புகிறேன் எனும் உணர்வு தோன்றியது. திடுக்கிட்டேன். ஆத்மார்த்தமான உணர்வு அது. வெட்டவெளியிலிருந்து அடைக்கப்பட்ட உலகுக்குள் போகும் பயம். ஆர். அபிலாஷ்