
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
பெரியாரின் வாழ்க்கைப் புத்தகத்தின் பெரும்பாலான
ஏடுகள் போராட்டங்களும் எதிர்ப்புகளும் நிறைந்தவையாகவே இருக்கின்றன.
முரண்பாடுகளையே, முக்தி பெறச் செய்யும் வழியென்று நினைத்திருந்த முட்டாள்
சமூகத்தினர் புத்தி பெறப் போராடிய மாமனிதன் தந்தை பெரியார். பறையரும்
பாமரரும் பாராள வேண்டும் என்ற அவருடைய உயரிய எண்ணத்திற்கு உரமிட்டவர்கள்
வெகு சிலரே. அவரை விமர்சித்தவர்கள்தான் ஏராளம். இப்படிப்பட்ட சூழலில்,
தன்னலம் கருதாத் தியாக உள்ளத்தின் திரு உருவாக விளங்கியவரின் பெயரை ஒரு
பள்ளித் தாங்கி நிற்கிறது என்றால் அதன் பின்புலம் யாராக இருக்கக்கூடும்?
பெரியாரைப் போலவே அந்தப் பள்ளியும் அவர் பெயரைச் சூடுவதற்குப் பல
போராட்டங்களைச் சந்தித்து இருக்குமோ என்ற எண்ணம் என் உள்ளத்தினூள்
ஓடிக்கொண்டிருந்தது. அரியாங்குப்பம் தந்தை பெரியார் மேனிலைப் பள்ளிக்கு
அப்பெயர் வரக் காரணமாக இருந்தவர்கள் யார்? அதன் வரலாறு என்ன என்பதைத் தேடி
என் பயணம் தொடங்கியது. இம்முறையும் எனக்கு வழிகாட்டியவர் என்
மதிப்பிற்குரிய ஆசான் திரு. இளங்கோ தாமோதரன் அவர்கள்தான்.
யாரிடம் கேட்டால் இதுபற்றிய தகவல்களைப் பெறமுடியும்
என்று கேட்க அவரை தொலைபேசியில் நான் தொடர்புக் கொண்டபோது, ‘பெரியாரின்
பெயரை பள்ளிக்கு வைக்க வேண்டும்’ என்று முன்மொழிந்தவரின் சீடன் நான்:
அவரோடு சேர்ந்து உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்றார். இவ்வளவு எளிதாக என்
வேலை முடியும் என்று நான் சிறிதளவும் நினைக்கவில்லை. உள்ளத்தில்
மகிழ்ச்சிப் பெருக்கு பொங்க உடனடியாகத் தயாராகிவிட்டேன் அவரிடம் அந்த
உண்மைக் கதையைக் கேட்பதற்கு. அவ்வளவும் தொலைபேசியிலா? அது சாத்தியமல்ல,
நானே நேரில் வருகிறேன் என்றார். சற்றே ஏமாற்றத்துடன் தொலைபேசியினைத்
துண்டித்தேன். மழை வந்து தடைப் போடவே, நான் வெகு நாட்கள் காத்திருக்க
வேண்டியதாயிற்று. ஒரு நாள் ஐயா அவர்கள் எங்கள் இல்லத்திற்கு
வருகைபுரிந்தார். வெகு நாட்களாக படிக்கத் துடித்த ‘பொன்னியின் செல்வன்’
புத்தகம் கையில் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு. ஆர்வம் மேலிட, பேனாவும்
நோட்டுமாக அவருடன் அமர்ந்துவிட்டேன். அவர் சொன்னது சொன்னபடியே உங்களிடம்
சமர்ப்பிக்கிறேன்.