கைகளில் விலங்கு மாட்டட்டுமா? என்று அதிகாரிகள் கேட்டபோது மாணவர்களே அதனை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். '' நீங்கள் விலங்கு போடுகிறபோது கடிகாரம் கட்டுவதைப்போல இருக்கிறது'' என்று சிரித்துக்கொண்டே கூறினார்கள் அந்த மாணவர்கள். மாமரத்துக் குவாரண்டைன் என்கிற சிறைப்பகுதியில் அவர்கள் வைக்கப்பட்டனர் என்ற காமராசனின் வரிகள், மாணவச் சிங்கங்களின் மகத்தான பண்பு நலனைப் படம்பிடித்துக் காட்டுகிறது! இவ்வாறு இந்தக் கட்டுரைத் தொகுப்பின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு பக்கமும் சிறப்பானது! எழுச்சியை ஊட்டக் கூடியது! இன்றைய இளைஞர்களை இலட்சிய மாவீரர்களாக வார்த்தெடுக்கக் கூடியது திராவிட இயக்க வீர வரலாறாய் ஒளி வீசித் திகழும் இந்நூலை வெளியிடும் கருஞ்சட்டைப் பதிப்பகத்திற்கு மீண்டும் என் பாராட்டுகள்! வாழ்த்துகள்!