மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவு முறைப் பழக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கு உடல் அளவிலும் மனத்தளவிலும் எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், பெரும்பாலானவர்கள் அறிவியல் மற்றும் மருத்துவ முறையில் நிவாரணம் வேண்டி மருத்துவர்களைத் தேடிச் செல்கின்றனர். மற்றவர்கள், ஆன்மிகவாதிகளைத் தேடிச் செல்கின்றனர்.
ஒரு காலத்தில், ஆதிசங்கரர், சங்கராச்சாரியார், சாய்பாபா, குருநானக் என எத்தனையோ துறவிகள், தங்களுடைய ஆன்மிக அனுபவங்களை மக்களை நல்வழிப்படுத்தவும், நெறிப்படுத்தவும் பயன்படுத்தினர். அப்படி மக்களுக்குச் செய்யும் சேவையை, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அவர்கள் நினைத்துச் செயல்படுத்தினர். இவர்களைத் தொடர்ந்து வந்த சிலர், எதையும் இலவசமாகக் கொடுத்தால் மக்கள் உதாசீனப்படுத்திவிடுவார்கள், மக்கள் மத்தியில் நிற்க முடியாது என்று நினைத்து, மக்களுக்கான சேவையில் கொஞ்சம் மசாலாவைச் சேர்த்துக் கொண்டதன் விளைவு, கார்பரேட் சாமியார்கள் என்ற முத்திரை.
இன்று உலக அளவில் எத்தனையோ ஆன்மிகவாதிகள், மக்களுக்கான உண்மையான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புத்தகத்தில், இந்தியாவில் செயல்பட்ட, செயல்பட்டுக்கொண்டிருக்கும் சில ஆன்மிகவாதிகளைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு சாதாரண நிலையில் இருந்து இன்று பெரிய பெரிய ஆசிரமங்களையும், கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் வைத்துக்கொண்டு, மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளை அலசி ஆராய்ந்துள்ளார், நூலாசிரியர் குகன்.