ஆனந்தரங்கப்பிள்ளை 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்; பிரெஞ்சிந்திய ஆளுநர் துய்ப்ளே (Duplex) காலத்தில் தலைசிறந்த துவிபாசியாகப் (Chief Dubash) பணியாற்றியவர்; தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, சமசுகிருதம், மலையாளம், போர்ச்சுகீசியம் முதலான பன்மொழி அறிவு வாய்க்கப் பெற்றவர்; தமிழ் மொழியில் இவர் எழுதிய நாட்குறிப்புகள் இருபத்தைந்து ஆண்டுகள் தென்னிந்திய அரசியல், சமூக, சமய வரலாற்றை வெளிப்படுத்தி உள்ளன.
சீனிவாச கவி எனும் வடமொழிப் புலவர் ஆனந்தரங்கரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு வடமொழியில் இயற்றிய பாவியமே 'ஆனந்தரங்க விஜய சம்பு' என்பதாகும். 18 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற இந்நூலுக்குச் சிறந்ததொரு திறனாய்வுரை இருபதாம் நூற்றாண்டில் பேராசிரியர் இராகவன் அவர்களால் எழுதப்பட்டது. இந்தத் திறனாய்வுரையின் தமிழ்மொழி ஆக்கமே இந்நூல் ஆகும்.