விஜயகுமாரின் கவிதைகள் வாழ்தலின் நினைவேக்கங்களை தனது நிகழ்காலமாக பாவிக்க
முனைபவை. தன் மொத்த அனுபவங்களையும் ஒரேசமயத்தில் ஒரு சட்டத்திற்குள்
எழுதிவிடத் துடிக்கும் இளைஞனின் நிலைகொள்ளாமை, பரிவுணர்ச்சி, பிரிவு,
ஏக்கம், ஆறுதலுக்காக வேண்டி நிற்றல் மற்றும் பிறழ்வை ஆராதித்தல் என்று
கவிதைகள் யாவும் ஒரு நிறைவுறாத சுயத்தின் அறிக்கைகளாக
வெளிப்பட்டிருக்கின்றன. தனது வலியை, ரசனையை ஒரு கண்டறிதலாகக் கூறுகையில்
அதைக் கேட்பதற்கு ஒரு நபர் கவிதைக்குள்ளேயே இவருக்குத் தேவைப்படுவதாகத்
தோன்றுகிறது. அந்த உருவகமான முன்னிலையை நோக்கித் தன்னையே எறிவதுமாக,
மீண்டும் அதை கவனமாக பற்றிக்கொள்வதுமான ஊடாட்டம் இத்தொகுப்பின்
பொதுத்தன்மையாக குறிப்பிடலாம். அந்த அலைவுறுதலே கவிஞர் இந்த நவீன வாழ்வை
புரிந்துகொண்ட விதமாகவும் பார்க்கலாம். கற்பனையின் இடையீடுகள் ஏதுமின்றி
பெரும்பாலும் ஒன்றை எடுத்துரைப்பதிலேயே மேலதிகமாய் திருப்தியுறும் இவரின்
கவிதைகள் முதல் தொகுப்பிற்கே உரிய பதற்றங்களையும், பாதிப்புகளையும்,
கவித்துவம் குறித்த குழப்பங்களையும் மிக நேர்மையாகவே ஒப்புக்கொண்டபடி தமிழ்
சூழலுக்குத் தம்மை அறிமுகம் செய்துகொள்கின்றன.