நான் சென்னைக்கு நிரந்தரமாக வசிக்கவந்தது ஒருஆகஸ்ட்மாதத்தில். இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன. சென்னையின் முகம் முழுக்க மாறிவிட்டது. இருந்தாலும் சென்னைக்கென்று ஓர் ஆன்மா உள்ளது. அது ஒருபோதும் மாறுவதில்லை. இந்த நகரம் முழுக்க முழுக்க உழைப்பாளர்களின் நகரம். எத்தனை இயற்கை பேரிடர்கள் அசைத்தாலும் இந்நகரின் உழைப்பாளர்கள் நகரை மீட்டெடுத்து மீண்டும் இயங்க வைத்து விடுகிறார்கள். ஜாதி, இனம், மொழி பார்க்காமல் வந்தேறிகளை கவுரவம் செய்து அதேநேரம் பலரை காவுகொண்டதும் இதே நகரம். சென்னையின் சிறப்பே அதன் தொன்மையும், நவீனமும் ஒரு சேர பார்க்கமுடிவதே. நூற்றாண்டு கண்ட பிரிட்டிஷ் கட்டடக்கலையையும், நவீன ஐடி நிறுவனங்களையும் ஒரே பகுதியில் பார்க்கமுடியும். சென்னைக்கு என்னால் எதுவும் திருப்பிக்கொடுக்க முடியாது. சென்னையை பற்றி நான்கு நாவல்கள் பதினைந்துசிறுகதைகள், சில கட்டுரைகள்எழுதியுள்ளேன். எப்போதும் சென்னையை எழுதிப் பார்க்கவே விரும்புகிறேன்.