சிறு தெய்வங்கள் பெரும்பாலும், ஒன்று வீரத்தைப் பறைசாற்றுகிறது அல்லது ஏமாற்றத்தின் குறியீடாக உள்ளது என்பது என் கணிப்பு. இந்நாவலில் வரும் எத்தை அம்மன்கூட அப்படி ஒரு ஏமாற்றத்தின் குறியீடாக வரும் பெண்தான். இந்நாவல் முழுக்கப் பயண்பட்டுக்கொண்டே இருக்கும் எருமை மாடுகள் மீது நமக்குப் பெருங்காதல் உண்டாகிறது. அதேபோல பாரம்பரியத்தை பாதுகாப்பதில் நீலகிரி மலை மாவட்ட மக்களான படுகர்களுக்கு இணையாக யாரையும் ஒப்பிடமுடியாது என்பது இந்நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் உறுதியாகும். இந்நாவலின் கதைக்களம் முழுமையும் மலையில் நடந்தாலும், காலங்கள் மாறும்போது மனிதர்களும், அவர்களின் அன்றாட நிகழ்வுகளும், உணவுகளும் என எல்லாவற்றிலும் நிகழும் மாற்றங்கள் நாவலில் இயல்பாக பதிவாகியுள்ளது. இந்நாவலின் சுவடுகளைப் எழுத்தின் வழி பின்தொடர்ந்தால், மனிதகுலம் தோன்றிய காலத்தைக்கூட தொட்டுவிட்டு வரலாம் என்பது எனது கருத்து. இது சுபானந்த்-ன் முதல் நாவல் என்றாலும் தன் அனுபவ அறிவை சிறப்பாக எழுத்து வடிவில் கொண்டு வந்ததில் அவரின் முதிர்ச்சி தெரிகிறது.
'செரப்பணிகெ' என்பது, வெள்ளியால் செய்யப்பட்டு, படுகர் இனப்பெண்கள் கழுத்தில் அணியும் அழகிய ஆபரணம்.