25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில்
இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது.
நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு
மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்;
பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மனிதர்களை எந்திரங்களாக
மாற்றிக்கொண்டேயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்த ஏஜெண்டுகள்,
மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அலுவலகங்கள்; கண்டுபிடித்துச் சொல்ல மட்டுமே
முடிந்த, சரிசெய்யத் தெரியாத விஞ்ஞானம்; மனிதர்களுக்காக மனிதர்கள்
உருவாக்கி, நிர்வகிக்கும் குரூரமான அமைப்புகள். வாழும் ஆவலுக்கும் மரணம்
என்ற யதார்த்தத்துக்குமிடையே, எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும்
செயலற்றிருக்க முடியாமல் அல்லாடுவதை தர்மமாக ஏற்றுக்கொண்டுவிட்ட குடும்பம்
என்ற பரிதாபமான கருவி. எல்லாம் தற்செயல்தானா?
நிச்சயமின்மை, தனிமை, அர்த்தமின்மை இவற்றுக்கு என்ன நிவாரணம்? நாவலின்
நேர்மையான பரிசீலனையில் வெளிப்படுவது: குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களின்
கையாலாகாத்தனம்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகள்; எல்லாவற்றுக்கும் மையமான
மனிதன் எங்கே?
சமூக வாழ்வின் பிரச்சினைகளான ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும்
அன்றாட வாழ்வில் - வாழ்வதும் இருப்பதும் ஒன்றல்ல - பிரதிபலிக்கும்
விதத்தில், அடைவதற்கு அரிதான மன அமைதியுடன் எழுதப்பட்டுள்ள - உத்தியும்
சவாலானதுதான் - இமையத்தின் இந்த நாவல் இன்னொரு தளத்தில் புதிய உயரத்தை
அடைந்திருக்கிறது.