சீனிவாசன் நடராஜன், “கலை அல்லது காமம்” என்கிற அவருடைய இந்தக்
கட்டுரைகளில் கவிதை பற்றி அதிகம் பேசுகிறார். பேச முயற்சிக்கிறார். மரபு
தொடங்கி, நவீன கவிதைகள் வரையில் ஒரு பேச்சை உருவாக்குகிறார். அந்தப் பேச்சு
தொடரப் படுதல் வேண்டும். கவிதை பற்றி, கலைகள் பற்றி ஒரு சமூகம் பேசத்
தொடங்குமானால், அது நுண்ணுணர்வுக்குள் அடியெடுத்து வைக்கத் தொடங்குகிறது
என்று அர்த்தம்.
நீண்ட நெடிய மரபு கொண்ட தமிழ், இன்று அன்றாடச் செய்திகளை மட்டுமே
எடுத்து விவாதிக்கிறது. மறுநாள் அதனை மறதியில் தொலைத்து விட்டு, அடுத்த
செய்தியை விவாதிக்கத் தேர்வு செய்கிறது. ஒரு பரபரப்பு அடங்குவதற்குள், மறு
பரபரப்பு தேவைப்படுகிறது. கவிதையை, கலையை பேசு பொருளாக்காத எந்த ஒரு
சமூகத்திற்கும் இந்த ஊழ் வந்து சேரும். ஓவியம் பற்றியும், கூடவே
காரல்மார்க்ஸ் கணபதியின் நாவல் பற்றிய ஒரு பதிவும், ஒரு சினிமா
மதிப்புரையும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய சூழலில் நின்று
சீனிவாசன் நடராஜன் கவிதை பற்றிய ஒரு பேச்சை நிகழ்த்துகிறார்.கவிதையைப்
பொறுத்தவரையில் கவிஞர்களை மறு கண்டுபிடிப்புச் செய்ய வேண்டியது ஒரு
முக்கியமான பணி. பாரதி உள்பட பெருங்கவிஞர்கள் பலர் அவ்வாறு மறு
கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட பிறகு கண்டடையப் பட்டவர்களே. கவிதை முதலில்
வாசகப்பரப்பில் ஒருவரால் எடுத்துக் கூறப்பட்ட பிறகே அடையாளம்
காணப்படுகிறது.