21ஆம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ் இலக்கியத்தின் வேகமும், வளர்ச்சியும் ஒரு நூற்றாண்டு கால ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஈடானது. இலக்கியத்தில் வரம்புகளற்ற ஒரு வெளி உருவாகியிருக்கிறது. சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் எழுத்து ஆயுதமாகியிருக்கிறது. பிதாமகர்களின் அங்கீகரிப்புகள், தரவரிசைப் பட்டியல் என்பன போன்ற தளைகளுக்கு இனி இடமில்லை. ஆற்றல் பெற்றவனை அதிகார பீடங்களும் அழைத்துக்கொள்ளும், அல்லது அணைத்துச் செல்லும் காலமிது. தமிழ் இலக்கியத்தில் அனைத்து வயதுப் பெண்களும் தீவிரமாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் காலகட்டமாகவும் இந்த இருபதாண்டு காலம் இருந்து வந்துள்ளது. ‘நவீன தமிழ்’ வீறுபெற்று விடுதலையாகி சமத்துவம் எய்தி நிற்கிற இந்த இருபது ஆண்டு காலத் தமிழுக்கென்று தனிப்பெயர் வேண்டும் இல்லையா? இணையக் காலத் தமிழ், சமத்துவ காலத் தமிழ் என்று ஏதோ ஒரு பெயர் சூட்டப்படட்டும்.