
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் [1]. இவரது இயற்பெயர் முருகேசன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்குப் பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறித் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.
ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்![2]