சாதி, பாலினம் ஆகியவை சார்ந்து இந்துத்துவத்தின் கண்ணோட்டத்திலும்
அணுகுமுறையிலும் உள்ள பிரச்சினைகளின் வேர்கள் இந்து மதத்தில் இருப்பதைப்
பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இந்தியாவில் சாதி' என்னும் நூலை
அம்பேத்கர் எழுதும்போது இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக
வளர்ந்திருக்கவில்லை. சாதியத்தின் வேர்கள் இந்து மதத்தில் ஆழமாக
வேரோடியுள்ளதையும் அதன் கிளைகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு
வடிவங்களில் பரவியிருப்பதையும் அம்பேத்கர் உரிய ஆதாரங்களுடன் எடுத்துக்
கூறுகிறார். பாலினம் சார்ந்தும் அதே விமர்சனத்தை முன்வைக்க முடியும் என
இந்த நூலில் வந்தனா சொனால்கர் வாதிடுகிறார். இந்து மதம் சாதியத்தில்
மட்டுமின்றி ஆணாதிக்கத்திலும் ஊறியது என்று கூறும் வந்தனா, இந்து மதம்
சார்ந்த நூல்களையும் அதன் சமூக மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் ஆதாரமாகக்
கொண்டு தன் பார்வையை முன்வைக்கிறார். சாதிய அடுக்கிலும் பொருளாதார
நிலையிலும் உயர் நிலையில் உள்ள பின்னணியைச் சார்ந்த வந்தனா, தன்னுடைய சொந்த
வாழ்க்கையை முன் வைத்து இந்த விசாரணையைத் தொடங்குகிறார். பக்தி, பண்பாடு
ஆகியவற்றின் பெயரால் ஆணாதிக்கம் இங்கே நுட்பமாகவும் ஆழமாகவும்
நிலைபெற்றிருப்பதை நிறுவுகிறார். பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்த நூல் இந்து
மதம் குறித்த கூர்மையானதும் காத்திரமானதுமான விமர்சனத்தை முன்வைத்துச்
சமகால அரசியல் உரையாடலுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. இன்றைய
காலகட்டத்தில் “உயர்” சாதியைச் சேர்ந்த பெண்ணியவாதியாக இருப்பது என்றால்
என்ன என்பது குறித்த தன்வரலாற்றுத் தன்மை கொண்ட துணிச்சலான விசாரணை இந்த
நூல்