மனிதர்களின் குரூர எண்ணங்களும் வக்கிரச் செயற்பாடுகளும் மதங்களின் பேராலேயே நிகழ்த்தப்படுகின்றன. எந்த மதமும் இத்தகைய குரூரத்தனத்தைக் கற்பிக்கவில்லை. அவை அனைத்தும் நல்லதையே செய்; தீமையை ஒழி என்றே அறிவுறுத்துகின்றன. மதம் என்ற அரிய பொக்கிஷத்தை மனிதன் தனது சுயநலத்திற்காகவும், பிறரின் அழிவுக்காகவும் பயன்படுத்துகின்றான். ஆயினும், மானுடச் சமுதாயம் மதங்களின் உண்மையான நல்லம்சங்களைக் கடைப்பிடிப்பதில் அக்கறையின்றியே இருக்கின்றது.
இவ்வகையில் பார்க்கும்போது, இந்நூல் காலத்தின் தேவையையும் பூர்த்தி செய்வதாக இருப்பதையும் கண்டு கொள்ளலாம். உலகின் முக்கிய மதங்கள் பற்றியும் அறிவும் தெளிவும் அவசியமானவை. எவரும் தம் மதத்தை மதிப்பது போல் பிற மதங்களையும் மதிக்க வேண்டும். அப்போதுதான் பரந்த மனப்பான்மை மலரும்; வளரும். இந்நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் முறையில் இந்து மதம், பௌத்தம், இஸ்லாம் - ஓர் ஒப்பீட்டாய்வு எனும் இந்நூலை வெளியிடுகிறோம்.