“தமிழில் தனிப்பெருஞ்செல்வமாய், உலகம் உயர்வடைய, அமைதி காண, சமுதாயத்தின் அங்கமான தனிமனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் எழுதப் பெற்ற உலகத் தரமிக்க ஒரு பெரு நூல் திருக்குறள்.
திருக்குறள் மனித வாழ்க்கைத் தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மனித குணங்களை எடுத்தியம்புகிறது. எதை ஏற்க வேண்டும். எதைத் தவிர்க்க வேண்டும் என விளக்கம் தருகிறது.
திருக்குறளில் மாயா விநோதங்கள் ஏதுமில்லை. வானம் ஏறி வைகுண்டம் செல்வதற்கோ, மணலைக் கயிறாகத் திரிப்பதற்கோ, வானத்தை வில்லாக வளைப்பதற்கோ வழி சொல்லப்படவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் இயல்பானவை. எளிதாகக் கடைப்பிடிக்கும் தன்மை உடையவை. நடைமுறைச் சாத்தியம் மிக்கவை. செயல் வடிவம் கொண்டவை.
திருக்குறள் கருத்துக்கள் ஏட்டுச்சுரைக்காய் அல்ல. அது ஒரு கூட்டுப் பொரியல். முழுமையாக ஏற்று, உண்டு, பயன் பெறக் கூடியது. இந்நூல் மேடையிலே ஏறி மேற்கோள் காட்டிப் பேசுவதற்கான நூல் அல்ல. அது வாழ்வில் மேற்கொண்டு வாழ்வதற்கான நூல் ஆகும்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு பாமரர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம், மாணவர்களும் எளிதில் அறியும் வண்ணம், மிக எளிய தமிழில் பரிமேலழகர் உரை இயற்றியுள்ளார்கள்.