உலகத்திலேயே ஏழைகளுக்கான மிகப்பெரிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தும் நாடு இந்தியாதான். இருந்தும் ஏழை மக்களின் வாழ்வும், விளிம்புநிலை மக்களின் வாழ்வும் மேம்பட்டதாகக் கூற முடியவில்லை. இதற்குக் காரணம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தேவையான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. அந்த உரிமைகளை வென்றெடுக்கத் தேவையான திறனும் ஏழைகளிடம் வளர்த்தெடுக்கப்படவில்லை. எனவே இந்தச் சூழலில் அரசு, அரசாங்கம், ஆளுகை, நிர்வாகம், அரசியல், மக்கள் பங்கேற்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து வாசகர்களின் ஆழமான புரிதலுக்கு உதவிடும் வகையில் இந்நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.