கைலயங்கிரி பெருமானாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அனேக இடங்களுள், அவருக்கு மிகவும் முக்கியமானது 'சதுரகிரி ''என்னும் சதுராச்சலம் ஆகும். செந்தமிழ் நாட்டின் கண் உள்ள பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியைச் சேர்ந்ததும், மேருகிரி போன்ற மலைகளுக்கெல்லாம் மேலான பெருமை வாய்ந்ததுமான தலம் இம்மகா சதுரகிரித்தலம். சதிரகிரி மலையானது மனம், புத்தி ,சித்தம், அகங்காரம் என்னும் அசுத்த தத்துவ இருள் விலகும் வண்ணம் சந்திர ,சூரிய, அக்னிகளின் ஒளியை வீசுகின்றன. அச் சதிரகிரியில் முப்பத்து முக்கோடி தேவர்கள்,நாற்பத்து எண்ணாயிரம் மகரிஷிகளின் ஆசிரமங்களும் ,கின்னரர்,கிம்புருடர், சித்தவித்தியாதரர் போன்றோர்களின் வேத மந்திரங்களும் ,வேள்விச் சாலைகளும் , தபசுக்குகைகளும் நிறைந்துள்ளன.