பிள்ளையார் சுழி போடுவது எதற்காக என்று தொடங்கும் இந்த நூல் 18 சித்தர்கள் பற்றிய தகவல்களோடு முடிவடைகிறது. இதுவே ஆசிரியரின் திறமைக்கு அத்தாட்சி. அது மட்டுமல்லாமல் ஆன்மிக அர்த்தங்கள் வினையாற்றிடும் விழாக்களின் செயல்பாடுகளும் திருவிழாக்கள் எனும் தலைப்பில் திருவிழாக்களை கொண்டாடும் விதங்களை விபரமாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். மகான்களின் மகத்துவங்கள், கர்ம வினைகளைக் களைந்துக் கொள்ளும் மர்மங்கள், ஆய்வின் முடிவுகளை அறிவிக்கும் ஜோதிட சூட்சும இரகசியங்கள், மகாபாரதத்தில் ஜோதிடம் போன்ற கட்டுரைகள், பக்தி உலா முக்திக்கு நிலா எனும் பகுதியில் இவர் தனது எழுத்தின் மூலம் அந்தந்த ஆலயங்களுக்கு அழைத்துச் சென்று அந்த இறைவனின் காட்சியை கண் முன் நிறுத்துகிறார். சித்தர்கள் உலா பக்திக்கு நிலா எனும் பகுதியில், சித்தர்கள் தொடர்பான சிறப்பான தகவல்களைத் திறம்பட படைத்துள்ளார்.
"குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை" நூலே ஒவ்வொருவருக்கும் குருவாகி, மாந்தர் தாமே திருவை அடைய வழிவகுக்கிறது. இறைவனையே குருவாய் கண்டவர்களுக்கு குரு கிடைக்கப் பெறுவது உறுதி. கிடைத்த பின் குருவையே இறைவனாய் கருத வேண்டும் என முழங்கி குருவே சரணம் நிறைவே தரணும் என்று ஆன்மிக உலகில் மாபெரும் குருவாக யாவரும் ஏற்றுக் கொண்டு வழிபட்டு வரும் மகான்களின் வரலாற்று குறிப்புகள், ஞான உபதேசங்கள், ஆன்ம விளக்கங்கள் மிக அருமையாக தொகுத்து வகுத்துத் தரப்பட்டுள்ளது. இப்படி பல அரிய பொக்கிஷங்கள் பொதிந்து கிடக்கும் ஒரு ஞானப்புதையல் இந்நூல். இவரது திறமைக்கும் எழுத்து நடைக்கும் ஏற்றமான போற்றுதலுக்குரிய கருத்துக்களுக்கும் உற்ற சாட்சி இந்நூல் படிப்போர் மனதிற்கு தெம்பையும், தெளிவையும் அறிவையும் ஆன்மிகத்தையும், ஆனந்தத்தையும், ஆற்றலையும், ஆரோக்கியத்தையும், ஆண்டவனின் அருளாசியையும் தருகின்ற அற்புத நூல். பொற்பதம் கூட்டி, அற்புதத்தை அளித்து ஆண்டவனின் திருப்பாதத்தை பற்றிட வழி வகுப்பதே "குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை" வாசகர்களுக்கு இது ஓர் அரியதோரு வாழ்வின் வரப்பிரசாதம். அருட்செல்வத்தை கொடுத்திடும் குருப்பிரசாதம்.