பதினெட்டு சித்தர்களில் ஒருவராகக் கருதப்படும் புலிப்பாணி முனிவர், சித்தர்
பெருமக்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுபவரும், பழனி தண்டாயுதபாணி
ஸ்வாமியின் நவபாஷாண உருவச் சிலையை படைத்தவருமான போக முனிவரின் மாணவர்
ஆவார். இந்த நவபாஷாணச் சிலையை படைத்திடும் போது போக முனிவருக்குப் பெரும்
உதவியாய் இருந்த சீடர் புலிப்பாணி ஆவார். பிற்காலத்தில் பழனி மலை
திருக்கோயிலின் நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். இப்போதும் கூட இவரது
பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மலைக் கோயிலில் தொண்டுகள் பல புரிந்து வருவதாகக்
கூறப்படுகிறது.
புலிப்பாணி என்பது இவரது இயற்பெயர் அல்ல என்றும் புலி ஒன்றினை அடக்கி
அதன் மீது அமர்ந்து வந்த முனிவர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்றும்
ஒருசிலர் கூறுகின்றனர். சிதம்பரம் கோயில் சூல புராணத்தில் கூறப்படும்
வியாக்கிர பாதர் என்பவருக்கு புலிக்கால் இருந்ததால் அவரும் இவரும் ஒருவரே
என்ற கருத்து நிலவி வந்தாலும் அவர் வேறு, இவர் வேறு என்ற கருத்தே பரவலாகக்
கருதப்படுன்றது.