"நேற்று பேருந்து நிறுத்தத்தில் இரண்டு கல்லூரிப் பெண்கள் பேசிக்கொண்டது தற்செயலாக காதில் விழுந்தது.
பெண் 1: ஏய்... நேத்து ஸ்வேதா ஒரு செம விஷயம் சொன்னாடி... நான் அப்படியே ஸ்டன்னாயிட்டேன்.
பெண் 2: என்ன விஷயம்?
பெண் 1: ஸாரிடி.... யாருகிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ஸ்வேதா என்கிட்ட சத்தியம் வாங்கியிருக்கா…
பெண் 2: அதெல்லாம் பரவால்ல…. சொல்லுடி…
பெண் 1: ஏய்... நான் உன் மேலதான்டி சத்தியம் பண்ணி யிருக்கேன். சத்தியத்த மீறினா உன் உயிருக்குதான்டி ஆபத்து இப்போது சற்றே தடுமாறிய பெண் 2 சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு, "சத்தியமல்லாம் சும்மாடி... நீ சொல்லு… ஸ்வேதா என்ன சொன்னா?" என்றாள். அதற்குள் பஸ் வர.... அவர்கள் ஏறிவிட்டனர். எனவே ஸ்வேதா சொன்ன விஷயம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் தன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் பரவாயில்லை…. "ஸ்வேதா என்ன சொல்லியிருப்பாள்?"; என்பதில் இளம் பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்த... நட்சத்திர வடிவில் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்த... பல்லில் க்ளிப் மாட்டியிருந்த….
(நான் அந்தப் பெண்ணை உற்று கவனிக்கவில்லை என்பதால் சரியாக வர்ணிக்க முடியவில்லை) அந்தப் பெண் 2 காட்டிய ஆர்வம் என்னை புல்லரிக்க வைத்தது.
இப்போது என் மனதில் இரண்டு கேள்விகள்: 1. யார் மீது சத்தியம் செய்கிறோமோ, அவரிடமே சத்தியத்தை மீறி விஷயத்தை சொன்னால் அந்த சத்தியம் சட்டப்படி செல்லுமா? 2. ஸ்வேதா என்ன சொல்லியிருப்பாள்?"