காலத்துக்கேற்ற முன்னோக்கிய பயணத்தில், மனதின் பிடி இடையிடையே
கைவிட்டுப் பின்னோக்கிச் செல்கிறது. அப்போது பல்வேறு மொழிகள் பேசுகிற,
பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட அயல்வாசிகளும், சக ஊழியர்களும், வெறும்
அறிமுகம் மட்டுமே உள்ள ஏராளமான மனிதர்களும் அடங்கிய நீண்டதொரு வரிசை
மனக்கண்ணில் தங்கி நிற்கிறது. எனது ஆன்மாவினுள் என்றோ கலந்துபோயிருந்த
அவர்களது மகிழ்ச்சியும் வேதனைகளும் என்னுள் புனர்ஜென்மம் பெறுகின்றன. அவை
உருவாக்கும் மனவுணர்வுகள் இலக்கியத் தாகத்துக்கு நீரூற்றாக அமைகின்றன.
ஆகவேதான்,
எனது பல படைப்புகள் கேரளத்துக்கு வெளியே நிகழும் வாழ்க்கை அனுபவங்களைப்
பிரதிபலிப்பதாக அமைகின்றன. தான் வாழ்கின்ற சூழல்களில் இருந்துதான் ஒரு
படைப்பாளி தனக்கான கிரியாஊக்கியைப் பெற இயலும். எனில், நீண்ட முப்பத்து
மூன்றாண்டுகள் ஒடிசாவில் வாழ்ந்த எனது எழுத்தில் ஒடியாவின் மண்வாசம்
வீசுவதுதான் இயல்பு. ‘கால மாற்றம்’ என்னும் இந்த நாவலின் கற்பனைக்
கதாமாந்தர்களும் ஒடிசா கலாசார பின்னணியுடன்தான் வந்துபோகிறார்கள்.