சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர் (பிறப்பு: 26
திசம்பர், 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர்
ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி
சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், பிறகு அக்கட்சியிலிருந்து
விலக்கப்பட்டார். இவருடைய நாடக வசனங்கள் நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும்,
அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக
விமர்சிக்கப்படுவதும் உண்டு. 1974-இல் முதல் இவர் தன்னுடைய கலைப்பயணத்தை
மேற்கொண்டுள்ளார். 1974 இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத்
தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400
முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறிமுகப்படுத்தியவர்கள் சிலர்,
கிரேசி மோகன், கோபு-பாபு, கிருஷ்ணகுமார், நிலா. இவர் கதாநாயகனாகவும்,
முக்கிய பாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.