அன்னையர் வழியாக அறியப்படுகின்ற மரபு வழிச் செய்திகள் சமூகத்தில் முக்கிய இடம் பெறுவதை நாம் அறிவோம். அத்தகைய செய்திகள் உண்மையானவை என்றே இன்றும் நம்பப்படுகின்றன. அந்த வகையில் "கபாடபுரம்" என்ற இடத்தில் மிகுதியாக வாழ்ந்தவர்கள் என்றும் கூறப்படுபவர்கள் பரவர் என்னும் கடலோடி இனத்தவர்கள். அந்த அடிப்படையிலே இந்நூல் "காபாடபுரத்தான்" எனும் பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் அன்பு இளவல் தொ. சகாய பெனடிக்ட் என்பவர். அன்னார் கடலோடும் மாலுமி என்பதும் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகில் உள்ள "புத்தன்துறை” என்ற ஊரினர் என்பதும், ஆங்கில இளங்கலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது தொழிலால் வேறுபட்டாலும், தமது ஆங்கில புலமையால் பல்வேறு செய்திகளைக் கற்று அவற்றைத் தமிழில் நூலாகத் திரட்டித் தந்திருப்பது பாராட்டுதற்குரியது.