படிக்கப் படிக்க இனிக்கிறது! தமிழ் வளர்ச்சிக்குச் சான்று!! - "வரலாற்றில் கலைஞர்" என்ற அழகிய தலைப்பில் இந்நூலாசிரியர் திரு.வலம்புரி ஜான் அவர்கள் கலைஞர் முதல்வரிடம் தமக்குள்ள பற்றினை, அவர் சாதனைகளில் தமக்குள்ள மயக்கத்தை இந்நூலிலே வரிக்குவரி காட்டியுள்ளார். ஆம்... கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகம் இதுவரை கண்ட முதல்வர்களிலே முதல்வர் தான்! அதில் ஐயப்பாடே இல்லை! கலைஞரின் தலைவராய் தலையனாய் வழி காட்டியாய் விளங்கிய அறிஞர் அண்ணா அவர்களே இன்று உயிர் பெற்றுவந்தால் கலைஞரின் திறமைகண்டு, செயற்கரிய செய்யும் ஆற்றல் கண்டு வியந்து பாராட்டுவார். "தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது" என்பதன்றே வள்ளுவர் வாக்கு! அமரர் முத்துவேலப்பர் பெறற்கரிய மைந்தனைப் பெற்று தமிழகத்திற்குத் தந்து போனார் என்பதனை இந்நூலாசிரியர் வலம்புரி ஜான் தமது எழுத்தோவியத்தால் புலப்படுத்துகிறார். நூல் படிக்கப் படிக்க இனிக்கிறது; தமிழின் அழகும், சுவையும் வரிக்கு வரி புலப்படுத்தப்படுகிறது. ஆசிரியர் வலம்புரி ஜான் சிறந்த பேச்சாளர். இவரது பேச்சினைக் கேட்டு பல முறை நான் ரசித்திருக்கிறேன். அதனால் தான் வலம்புரி ஜான் என் மதிப்பிற்குரிய நண்பரானார். இந்த நூலால் வலம்புரி ஜான் அவர்கள் சிறந்த எழுத்தாளர் என்பதையும் அறிகிறேன். தமிழ் வளர்ச்சியற்றுப் போகவில்லை. நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பதற்கு இந்த நூலாசிரியர் சிறந்த சான்றாக விளங்குகிறார். கலைஞர் கருணாநிதி சரித்திர நாயகர்; சாதனை மன்னன்; நினைத்ததை முடிக்கும் சீரியர். இவற்றை இந்நூலில் அழகு பட நிரல்பட விளங்குகிறார் ஆசிரியர் வலம்புரி ஜான். கலைஞர் ஆட்சி இன்னும் பல மாமாங்கங்கள் நீடிக்க வேண்டுமென்று விரும்புபவர்களிலே நானும் ஒருவன். அதற்கு இந்நூல் போன்று கலைஞரின் சிறப்பை விளங்கும் அரிய நூல்கள் இன்னும் பல நூல்கள் வெளிவர வேண்டுமென்பது என் விருப்பம். கலைஞர் கருணாநிதி, இந்த ஆண்டு ஜீன் 3ல் ஐம்பதாவது வயதைத் தொடுகிறார். ஆம். பொற்காலத்துக்குள் புகுகிறார். அவருக்கு அடுத்த ஆண்டு முழுவதும் பொற்காலமாக விளங்கும். பொற்காலத்துக்குள் புகும் புண்ணியருக்க வலம்புரி ஜான் படைக்கும் இந்தக் காணிக்கை நூலுக்கு மதிப்புரை வழங்கும் பேறு கிடைத்தது எனக்கு வாய்த்த பெருமையாகும். இந்நூலின் நாயகன் கலைஞரையும், நூலின் ஆசிரியர் வலம்புரி ஜானையும் மனதார வாழ்த்துகிறேன். தமிழ்வாழ, தமிழர் வாழ, தமிழ்நாடு வாழ கலைஞர் வாழ வேண்டும். அவரது ஆற்றல் நாளொரு மேனியாக வளர வேண்டும். இது என் பிராத்தனை.