இது கோலமல்ல; வெறும் புள்ளிதான்...நான் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறேன். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். "பிராத்தனைப் பூக்கள்' என்கிற இந்தப் புத்தகம்தான் என் முதல் புத்தகம் என்பதை அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். நோய்வாய்ப்பட்டிருந்த கடந்த ஒரு வருடத்தில் எதுவுமே எழுத இயலவில்லை. 'தமிழன் எக்ஸ்பிரஸ்', 'ராணி', 'இதயம் பேசுகிறது', 'நக்கீரன்' ஆகிய வார இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்கூட இன்னும் புத்தகங்கள் ஆகவில்லை. எனது எழுத்துக்களை எப்போதும் பதிப்பித்து என்னை பெருமைப்படுத்துகிற அல்ஹாஜ் எஸ்.எம். இதாயதுல்லா ஆழ்ந்த சமுத்திரத்தின் அமைதியோடு அறிவைத்தேடி பாராட்டுகிற அற்புதமான மனிதர். வாஞ்சையே மனிதனாக வடிவம் கொண்டதுபோல விளங்குகிற எஸ்.எம். இதாயதுல்லா அவர்களுக்கு என் நன்றிப் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன்.