மிகவும் அபூர்வமாகத்தான் தமிழில் வெளிவருகிற தொடர் கதைகள் இலக்கியமாக உருவெடுக்கின்றன. இப்படித் தொடர் கதையாக ஆனந்த விகடனில் வெளிவந்த நல்ல நாவலாக உருவான நூல்களில் எஸ்.வி.வி.யின் ராமமூர்த்தியைச் சொல்ல வேண்டும். இது இப்பொழுதுதான் புத்தக உருவில் வெளி வருகிறது. பழசுக்கும் புதுசுக்கும் உள்ள உறவுகள் வாழ்க்கையில் மட்டுமல்ல. இலக்கியத்திலும் முக்கியமானவை. பழசின் பிடியைத் தளர்த்தி விடாமல் புதுசின் போக்கையும் அனுதாபத்துடன் கலை உணர்வுடன் கணித்து எழுத்தில் வடித்தவர் எஸ்.வி.வி. மிகவும் சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர். கனமான விஷயங்களையும் லேசாக, தனியாக மனத்தில் பதிய வைத்து விடுகிறவர்.