கம்பநாடன் கலைக்கோயில்பற்றிய திறனாய்வில் இந்நூல் மூன்றாவதாகும். 'நாடும் மன்னனும்' என்ற நூலில் தந்தை பற்றியும், ''அரசியர் மூவர்' என்ற நூலில் தாயர்பற்றியும் பேசப்பட்டதாகலின், அவற்றையடுத்து வெளிவரும் இந்நூல் மக்கள் பற்றிப் பேசுதல் முறைதானே? தசரதன் அரசனாகலின், அவனுக்கு இரு வகை மக்கள் உண்டு. அவர்கள், பெற்ற மக்களும் கீழ் வாழும் மக்களும் எனப் படுவார்கள். அவன் பெற்ற மக்களுள் ஒருவனாகிய பரதனும், அவன்கீழ் வாழும் மக்களுள் ஒருவனாகிய குகனும் இந்நூலிற் பேசப்படுகின்றனர். காப்பியத் தலைவனாகிய இராமபிரான் தந்தைமூலம் பெற்ற தம்பியாவான் பரதன்; தானே விரும்பி ஏற்ற தம்பியாவான் குகன். இவ்விருவருடைய பண்பாடுகளையும் புலவன் எவ்வாறு கூறுகிறான் என்பதைக்காண்டலே இந்நூலின் நோக்கம்.