புதிய தமிழகத்தின் குறிக்கோள் என்ன? அது எந்த முறையில் அமைய
வேண்டும்? புதிய தமிழகம் யாருக்காக? எதற்காக? புதிய தமிழகத்தை அமைக்கத்
தமிழ் மக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? இவைகளை விளக்குவதே இச்சிறு நூல்.
இந்திய யூனியனுக்குள் இன்றுள்ள மாகாணங்களை மொழிவாரி
அடிப்படையில் திருத்தி அமைக்க வேண்டும். மொழிவாரி மாகாணங்கள் என்பதும்,
தேசீய இனவாரி மாகாணங்கள் என்பதும் ஏறக்குறைய ஒன்றே தான். எல்லாத் தேசீய இன
மக்களும் சுதந்தரமாக-ஒற்றுமையாக-ஒருவரை ஒருவர் சுரண்டாமல் ஒருவரை ஒருவர்
அடக்கி நசுக்குவதற்கு இடமில்லாமல் வாழுவதற்கு இதுவே வழி.
மொழிவாரி மாகாணங்கள் ஒவ்வொன்றும் சுய நிர்ணய உரிமையுடன்
விளங்க வேண்டும். எந்த மொழி வாரி மாகாணத்திலும் அந்நியர் சுரண்டலுக்கு
இடமிருக்கக் கூடாது; நிலப்பிரபுத்துவக் கொடுங் கோன்மைக்கு இடமிருக்கக்
கூடாது. ஒவ்வொரு மொழிவாரி மாகாணத்திலும் ஜனநாயக ஆட்சியே நிலவ வேண்டும்.
இதுவே மொழிவாரி மாகாணம் கேட்பதன் நோக்கம்.
இந்த அடிப்படையில் தான் மொழிவாரி மாகாணங்கள் அமைய வேண்டும்.
இத்தகைய மாகாணங்கள் ஏற்படும் வரையில் மொழிவாரி மாகாணக் கிளர்ச்சி நடந்தே
தீரும்.ஆனால் இதற்கிடையில் தற்காலிகமாக, எந்த அளவில், எந்த அடிப்படையில்
மொழிவாரி மாகாணங்கள் அமைந்தாலும் அதை நாம் வரவேற்கின்றோம்.