வாழ்வின் அனுபவத்தை அலங்கரிக்கும் காலக்கண்ணாடியே கதைகள்… கற்பனையோ, கதையோ இல்லையென்றால் வாழ்வு வறட்சியாகி விடும்.பாட்டி, தாத்தா, நாடகம், கூத்து, புத்தகம், சினிமா… என்று எந்த வழியிலாவது கதை கேட்டே வளர்ந்தது தமிழ் சமூகம்.இதில்… நாடகமும், கூத்தும் காணாமல் போயின; ‘வாங்கிப்படிக்கும் ஜாதி’ என்று வகைப்படுத்தும் நிலையில் புத்தகம் உள்ளது; ‘இந்த காலத்துல எங்கேப்பா நல்ல சினிமா பாக்க முடியுது’ என்ற சலிப்பும் அதிகரித்து விட்டது; ‘தனிக்குடித்தன நாகரிகம்’ வந்தபின் பாட்டி, தாத்தா பற்றி சொல்லவே வேண்டாம்…
சரி, இந்த மாதிரியான ஒரு நிலையில் தமிழ் சமூகத்திற்கு, நல்ல கதைகள் சொல்ல யார் இருக்கிறார்கள்? யாராவது இருக்க வேண்டுமே…
சாமான்யனுக்கும் சாணக்கியனுக்கும் நல்ல கதை சொல்லும் பொறுப்பை தன் தோளில் ஏற்றிக் கொண்டது. தன் லட்சோப லட்சம் வாசகர்களை தன் மடியில் வைத்து தாலாட்டி, நல்ல கதைகளை நயமாய் இன்றும் கொண்டு சேர்க்கிறது.
ஒவ்வொரு வாரமும் தமிழ் இல்லங்கள் தோறும் உற்சாகக் காற்றாய் பயணப்பட்டு, கொண்டாட்ட மழையில் வாசகர்களை நனைத்து கொண்டிருக்கிறது.ஏராளமான புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, இலக்கிய உலகை செழிப்புறச் செய்கிறது.2010ம் ஆண்டு ‘தினமலர் – வாரமலர்’ இதழில் வெளியான கதைகளுள், சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து, படையலிட நினைத்ததன் விளைவே, இந்த புத்தகம்.படித்துப் பயன் பெற எம் பேரன்பும் பெருவாழ்த்தும்!