எங்கள் ஊரின் அருகிலுள்ள அருவியுடன் கூடிய ஒரு மூலிகை வனம் அது. பெரும்பாலும் குளிப்பதற்காகவே அங்கு செல்வோம். என்னுடைய சிறு வயதில் அதிக செலவில்லாமல் செல்லும் சுற்றுலா தளங்களில் அதுவும் ஒன்று. பெரும்பாலும் அதிக செலவில்லாமல் தான் அழைத்துச் செல்வர். அதில் முக்கியமானது தாணிப்பாறை, திருவண்ணாமலை, அத்தி, சாஸ்தா கோவில், அம்மன் கோயில். இதில் திருவண்ணாமலை மற்றும் அம்மன் கோயில் தவிர்த்து மற்றவை எல்லாம் குளிப்பதற்காக செல்லும் இடங்கள். திருவண்ணாமலையும், அம்மன் கோவிலும் குளித்துவிட்டுச் செல்லும் இடங்கள். திருவண்ணாமலை, அம்மன் கோயில் பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.
தாணிப்பாறை – எங்கள் ஊரிலிருந்து பதினான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேரடியான பேருத்துகள் குறைவே. வத்திராயிருப்பு சென்று அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் பேருந்து பயணம். தாணிப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பாதையில் நடந்து சென்றால், உங்களால் அருவிகளைக் காண முடியும். பாதை, பெரும்பாலும் சமதளமாகவும், சிறிது ஏற்றமாகவும் இருக்கும். முன்னெல்லாம் இந்தப் பாதை, மணல் மற்றும் கற்களுடன் கரடு முரடாக இருக்கும். இப்பொழுது நன்றாக கற்கள் பதித்து ஏறுவதற்கு சுலபமாக உள்ளது.