அகத்திணைப் பாடல்கள் உலக இலக்கிய வரிசையில் தனித்தன்மைகள் பலவுள்ள தனிச்சிறப்பிடம் பெறுவன. அப்பேரிலக்கிய நுழைவாயிலாக, இத் ‘தமிழ்க் காதல்’ என்றென்றும் பயன்படும். திருக்குறள் பயில்வார் ‘வள்ளுவத்தை'யும் அகத்திணை கற்பார் ‘தமிழ்க்காதலையும் தவிர்த்தல் இயலாது. தவிர்த்தால் அவை பற்றிய கல்வியும் நிரம்புவதரிது.சங்க இலக்கியங்கள் 1862 அகப் பாடல்களை உடையன. ஒவ்வொரு பாடலிலும் ஆண்பெண் உள்ளங்கள் உள்ளன. அப்பாடல்களைக் கற்பவர் 3724 காதல் உள்ளங்கள் பற்றிய அறிவு பெறுவர். மேலும் தலைவன் தலைவியர் பற்றிப் பாங்கன் நினைத்தனவும், ஊரார், கண்டார் நினைத்தனவும் ஆகிய பல்வேறு உள்ளங்களின் அறிவினையும் பெறுவர் என்பது ஆசிரியரின் துணிபு. இந்நூல் தொல்காப்பிய அடிப்படையில் சங்க அகத்திணைப் பாக்களை ஆய்ந்து பல நன்முடிபுகளை ஆங்காங்கே நுவல்கின்றது. அகத்திணைச் செய்திகளைப் புலப்படுத்தும் பாங்கும் சில சங்கப் பாடல்களுக்கு விளக்கத்துடன் தரும் நயமும் உளவியலை இயைத்துக் காட்டும் சீர்மையும் தனித்தமிழ் நடையின் இனிமையும் இந்நூல் கற்கும் தமிழார்வலர்கட்கு நல்விருந்தாகும். அகத்திணையின் இயல்புகளைப் பாரித்துரைக்கும் ‘தமிழ்க்காதல்’, தமிழின் சிறப்பையும் மாண்பையும் இனிமையையும் புலப்படுத்தி நிற்றலின் தமிழிடத்தும் காதலை உண்டாக்கும் என்பது ஒருதலை. தமிழ்கூறும் நல்லுலகம் ‘தமிழ்க் காதல்’ வழங்கும் காதலின்பத்தையும் தமிழின்பத்தையும் துய்த்துத் திளைப்பதாகுக!