குழந்தை இலக்கியம் என்றாலே அது அறிவுரை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களே அதிகம். அதனால் நிறைய நீதிநெறிக் கதைகள், ஆன்மீகக் கதைகள், பாடல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன, இன்றும் எழுதப்படுகின்றன.சிறுவர் பாடல்களிலும் கதைகளிலும் நல்ல நீதி இருக்க வேண்டுமென்பதற்காக நீதிநூல்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு திருக்குறள் கதைகள், ஆத்திசூடி கதைகள், புதிய ஆத்திசூடி கதைகள், கொன்றை வேந்தன் கதைகள், நல்வழிக் கதைகள், நன்னெறிக் கதைகள், பொன்மொழிக் கதைகள், பழமொழிக் கதைகள், காந்தி மொழிக் கதைகள், நல்லொழுக்கக் கதைகள், பண்பைப் போற்றும் கதைகள் என்று நூற்றுக்கணக்கான சிறுவர் நூல்கள் தமிழில் வந்துள்ளன.புராண, இதிகாச, காப்பியக் கதைகள் பக்திநெறி போதனைக் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. ‘பாலர் இராமாயணம்’, ‘பாலர் மகாபாரதம்’, ‘பைபிள் கதைகள்’ ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. அரிச்சந்திரன் கதை உண்மைக்கும், சிரவணன் கதை பெற்றோர் மீதான பக்திக்கும் எடுத்துக்காட்டுகளாகக் கூறப்படுகின்றன.